Freitag, 21. November 2008

அசோக்கைப் பின் தொடருகிறது "பாசிசம்"!


அன்பு வாசகர்களே,புலம் பெயர் மா(ட்டு)ற்றுக் கருத்தாளர்களுக்குள் மலிந்து மேவும் வன்முறைகளைக் குறித்து,மாறிமாறி அறிக்கையெறியும் யுத்தமொன்று மெல்லவுருவாகி வருகிறது.வாசிப்பதற்குப் பொருத்தமான பல சுவையான நடாத்தைகளைக் கொண்டியங்கும் நமது நண்பர்கள், ஒரு வகையில் பெரும் புண்ணியஞ் செய்தவர்கள்.அதாவது, ஈழத்தில் இருந்திருந்தால் நிச்சியம் இன்னொரு "சவுக்குத் தோப்பை"(உயிர்ப்பலியெடுத்துப் புதைக்கும் காடு) உருவாக்கியிருப்பார்கள்.இதுள் காலம் அவர்களுக்கு நல்லதே பண்ணியுள்ளது!


இத்தகைய(அடிபிடி-ஆட்கடத்தல்-அவதூறு-அண்டிக் கெடுத்தல்-அள்ளிவைத்தல்...)பிழைப்பைச் செய்வதற்கேனும் இவர்களிடம் உயிர் எஞ்சியுள்ளது.இது,அவர்களுக்குப் புலிகளின் போராட்டம் அளித்த நன்கொடை.


மக்கள்தான் பாவஞ் செய்தவர்கள்!


எனினும்,நல்லகாலம் இலங்கையிலுள்ள மக்களுக்கும்தாம்.


இத்தகைய மனிதர்கள் அங்குபோய் மீளவும்,மக்களைக் கொல்வதற்குள், தமக்குள் அம்பலப்பட்டுப் போவதில் மக்களைக் காக்கின்றார்கள்.


அப்பாடா!


இப்படியொரு கொடிய நரமாமிசப் புசிப்புக்கூட்டம் உலகில் "மாற்றுக் கருத்தாளர்கள்"எனும் போர்வையில் ஐரோப்பிய நாடெங்கும் தமிழ்பேசியபடி...


இவர்களையா நாம் நம்பி,ஆரோக்கியமான தோழர்களாக எண்ணிக்கொண்டோம்.



இராகவன்"நாவலனை அயோக்கியன்"என்று அம்பலப்படுத்துகிறார்.



அசோக்"சோபாசக்தி,ஞானம்,சுகன் தேவதாசன்,இராகவன் ஆகியவர்கள் சூழ்ச்சிமிகு அராஜகக் கிரிமினல்கள்"எனச் சொல்கிறார்.


இராகவனும்"அசோக் கபடத்தனமாகத் தனிநபர்களைக் குழப்பும் பேர்வழி"என்கிறார்.



தமிழ்பேசும் மக்களின் குருதியை உறிஞ்சிய இந்தத் தலைமுறை,இனியும் ஒரு விதி செய்கிறது-அது,மக்களின் வாழ்வைக் காடாத்துவதென!


புலிகளின் தலைமை கொய்த தலைகள் மண்ணுள் இற்றுப்போவதற்குள்,இவர்களும் வரலாற்றில் தமது பங்கைப் பதியம்போடுகிறார்கள்?


இன்றைய நமது "மாட்டுக் கருத்தாளர்களை"க் குறித்து தோழர் இராயாகரன் பற்பல கட்டுரைகளில் அம்பலப்படுத்தியபோது,நாம் இரஜாகரன்மீது சிலவேளை விசனப்பட்டதுண்டு-இவர்"எல்லோரையும் குறையுடைய மனிதர்களாக விமர்சிக்கிறாரே,இது சரியாக இருக்குமா"என யோசித்ததுண்டு.


இப்போது,இராயா சொன்வை அனைத்துமே உண்மையென்பது ஈழவிடுதலைப் போராட்டத் தத்துவத்துக்கு மட்டுமல்ல-இவர்களுக்கும் பொருந்துகிறது!


கடந்த கால் நூற்றாண்டாய் தோழர் இரயா சொன்னவை இப்போது ஒவ்வொன்றாக நிஜமாகிவருகிறது.



என்னவொரு விசேஷமெனின்,அது இராயாவின் ஆயுட்காலத்திலேயே சரியென்றும்,நிரூபணமாவதே!


உலகத்தில் பல தத்துவக் கோட்பாட்டாளர்களின் கருத்துக்கள்,அவர்களின் மரணத்துக்குப் பின்பே சரியாதென நிரூபணமாகிறது.இதற்கு மார்க்ஸ் நல்ல உதாரணம்.


ஆனால்,தமிழரங்கத்துள் விரவிக்கிடக்கும் இராயாவின் பல் நூறு கட்டுரைகள்பேசும் தரவுகள்-கருத்துக்கள்-ஆய்வுகள் அனைத்தும் சரியான மதிப்பீடுகளென நிரூபணமாகிறது.இது நமது மக்களுக்கு ஆரோக்கியமானது-புரட்சிக்கு உரம் ஊட்டுவது!


புலம் பெயர் மாற்றுக் கருத்தாளர்களில் பலர் வேடதாரிகள்-மக்கள் விரோதிகளெனச் செய்யப்பட்ட மதிப்பீடுகள் சரியானதாகவே கீழ்காணும் இராகவன்-அசோக் போன்றோரின் கட்டுரைகளின்வழி நிரூபணமாகிறது.


இத்தகைய மக்கள் விரோதிகள் அனைவரும் தம்மாற்றாமே அம்பலமாகும்போது,நாம் மேலும் பல மக்கள் விரோதிகளை இனம் காணத்தக்கதாகவே இருக்கிறது.இங்கே, எத்தனை வடிவத்துள் இந்தத் தீங்குகள் முக மூடிதரித்தியங்குகிறார்கள்!-குருதியுறையுங் கொடுமை வாசகர்களே இது.



தொடர்ந்து,வாசியுங்கள் வாசகர்களே.


இவற்றிலிருந்து தமிழர்களின் சமூ உளவியலைப் புரிந்து,இன்றைய நமது மக்களின் அழிவுகளுக்குக் காரணமானவர்கள் "எவர்கள்-எந்தச் சக்திகள்"என்பதை புரிந்துகொள்ளலாம்.நாளைய நமது தலைமுறைக்கு இவர்களின் வாக்கு மூலங்கள் மிக ஆய்வுக்குரிய பல தகவல்களை-தரவுகளைத் தரமுடியும்!எனவே,இதை மீள் பிரசுரிக்கும்போது,"சத்திய"கடுதாசிக்கும்-இனி ஒரு-வதை செய் தளங்களுக்கு நன்றியெனச் சொல்வது கடமை:நன்றி!


நட்போடு,

ப.வி.ஸ்ரீரங்கன்

21.11.2008


+++++++++++++++++


எம்மைத் தொடரும் பாசீஸம் : அசோக்





சமீப நாட்களாக அநாமதேய மின்னஞ்சல்களும் அநாமதேய இணையத்தளங்களும் என்னையும் ஏனைய சமூக உணர்வுள்ளவர்களையும்   நோக்கிய சேறடிப்புக்களில் இறங்கியுள்ளன. நான் எழுதியதாக இவர்களால் ‘புனையப்பட்ட’ பின்னூட்டங்கள் மின்னஞ்சல் மூலம் பல முகவரிகளுக்கு அனுப்பப்படுவதுடன் , தங்களின் அநாமதேய இணையத்தளத்தில் என் பெயரில் இவ் மின்னூட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நான் அ. மாக்ஸ்சுக்கு தீரா நதியில் எழுதிய ‘திறந்த கடிதத்திற்குப் பிற்பாடு இவ்வாறான செயல்கள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன . இவற்றிற்கு பின்னால் சோபாசக்தியும், லண்டன் ராகவனும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருகிறார்கள். அவர்களோடு கீரனும் அடக்கம்.

இவர்களால் புனையப்பட்டு, என் பெயரில் விடப்படும் மின்னஞ்சல்கள் பதிவுகள் மிக மோசமான வார்த்தைகளையும் பாலியல் வக்கிரகங்களையும் கொண்டனவாக இருக்கின்றன. இவற்றை எனக்கு மட்டும் அனுப்புவதோடு இல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் திட்டமிட்டு அனுப்பப்படுகின்றன. இவர்களின் வக்கிரமான எழுத்துக்களால் நானும் குடும்ப உறுப்பினர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றோம். இவ்வாறான செயல்பாடுகள் தாக்குதல்கள் புகலிடத்தில் எனக்கு புதியவை அல்ல. 2002ம் ஆண்டில் இவ்வாறு என் மீது மிக மோசமான மனோவிகார சேறடிப்புக்களை ‘பாலியல் மனோவிகார கிரிமினல்’ சோபாசக்தி நிகழ்த்தி இருந்தார்.

அன்று மொட்டைக் கடதாசி என்றும் மின்னஞ்சல் என்றும் இதே பாணியை கைக்கொண்டார். கலைச்செல்வன், லக்சுமி என இவரின் வதந்திகளும் காழ்ப்புணர்ச்சிகளும் புகலிடத்தில் தொடர்ந்தன. (இரயாகரனுக்கு உயிரோடு கல்வெட்டு எழுதிய குரூர மனம் கொண்டவர் அல்லவா இவர் ) புகலிடம் அவற்றை இன்னும் மறக்கவில்லை.

மீண்டும் இப்போது ராகவன் என்ற நபரின் துணையோடு மீண்டும் தன் கிரிமினல் தனத்தை தொடங்கிவிட்டார். இவர்கள் இருவரிடமும் தேங்கியிருக்கும் இந்த கிரிமினல் வகைப்பட்ட செயல்பாடுகள் புலிகளிடமிருந்து இவர்கள் கற்றுத் தேர்ந்த அரசியலில் இருந்து உருவாகியதாகும்.

இலங்கையில் தங்கள் அரசியலுக்கு முரண்பாடான அனைவரையும் துரோகிகள் ஆக்கி அவர்கள் மீது வதந்திகளையும் சேறடிப்புக்களையும் கதை கட்டல்களையும் பரப்பி கொலைகளைப் புரிந்த - புரிந்துகொண்டிருக்கின்ற புலிகளின் வரலாற்று பாரம்பரியத்தை ராகவனும் சோபாசக்தியும் புகலிடத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் செய்யும் சேறடிப்புக்களும் பாலியல் மனோவிகார குரூர எழுத்துக்களும் ஒரு மனிதனை உளவியல் ரீதியில் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும். இது பாசிசத்தின் ஒரு வெளிப்பாடாகும் புலியின் பாசறையில் இருந்து வெளிவந்த இந்த பாசிஸ்ட்டுக்கள், தங்கள் குரூர மனோ விகாரங்களை மிக நுட்பமாக இன்றைய மின் இணைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அரங்கேற்றுகின்றனர்.

இவ்வாறான கேவலம் மிக்க ராகவன், சோபாசக்தியின் நடவடிக்கைக்கான பின்னணியை ஆராய்வோம்.

லண்டனிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ( TBC ) என்னும் ஒலிபரப்பு நிலையம் சில வருடங்களுக்கு முன் இரண்டு தடவைகள் கொள்ளை அடிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. இவ் வானொலி தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியலை வன்முறை சார்ந்த செயல்பாடுகளை கடும் கேள்விக் உள்ளாக்கி விமர்சனம் செய்துவந்ததால் இக் கொள்ளைகள் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டதாகவே நம்பப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டு வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது. சில காலங்களில் பின் இக் கொள்ளைகள் தொடர்பாக மேலதிக தகவல்கள் கசியத் தொடங்கின. இக் கொள்ளைகள் விடுதலைப் புலிகள் செய்யவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோடு வேறு சில நபர்களும் சேர்ந்தே இக் கொள்ளையை செய்தார்கள் என்பதும் வெளிவந்தது. (முழுமையான விபரங்கள் அறிய தேசம் நெற் இணையத்தை அழுத்தவும்) இந்த நபர்கள் யார் யார் என அறிய வந்தபோது நாங்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். காரணம் அதில் சம்பந்தப்பட்டிருந்த ஒருவர் எங்களது நண்பராக இருந்தார்.

அவர்  கீரனாகும், இன்னொருவர் எங்களுக்கு தெரிந்தவாராக இருந்தார். அவர் லணடன் ராகவன் ஆகும், அத்தோடு இவ்விருவரும் லண்டனில் இயங்கும் இலங்கை ஐனநாயக ஒன்றியத்தின் (SLDF)முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்தார்கள்.

எனவே இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக எங்களுக்குள் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள் வெளிவரும் போது விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தியது பொய்யாகிவிடும் என்பதும் அவை புலிகளுக்கு சாதகமாகிப்போய்விடும் என்ற அபிப்பிராயங்களும் தெரிவிக்கப்பட்டன. இதனால் தெரிந்த எங்களால் இவை மூடிமறைக்கப்பட்டன. ஆனால் இது எப்படியோ ஆங்கில இணைய தளம் ஒன்றின் ஊடாக வெளிவந்துவிட்டது.

இந்த ஆங்கில அறிக்கை உண்மையானதாயின்  ராகவன், கீரன் குழுவிடமிருந்து நியாயத்தையும், பொய்யானதாயின்  மறுப்பையுமே நாம் எதிர்பார்த்தோம். இதில் எந்த வித அநீதியும் அயோக்கியத்தனமும்  இருப்பதாக நான் கருதவில்லை. கேள்வி கேட்டால் துரோகிகள் என்ற புலிகளின் வன்முறைச் சாக்கடைக்குள் ஜனநாயக முத்தெடுக்க முனைபவர்களுக்கு வேண்டுமானால் இது அயோக்கியத்தனமாகத் தெரியலாம்.

இதன் காரணமாக அந்த ஆங்கிலச் செய்தியை தமிழில் மொழியாக்கம் செய்து இனியொருவில் வெளியிட்டோம். இதுவே ராகவன் என் மீது காழ்ப்புணாச்சி கொள்வதற்கு காரணமாயிற்று.

இவ்விடத்தில் இன்னுமொரு சம்பவத்தை கூறவிரும்புகின்றேன். 14.06.2002ல் பரிசில் லாசப்பல் என்னும் இடத்தில் வைத்து நான்கு இளைஞர்களால் நான் தாக்கப்பட்டேன். அதில் ஒரு இளைஞர் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதால் இத்தாக்குதலை தமிழ் ஈழ விடுதலைப் புலிகளே செய்ததாக நாம் நினைத்தோம். எங்களது கண்டனங்களும் விமர்சனங்களும் புலிகளை நோக்கியே வைக்கப்பட்டன. 23.06;.2002ல் அன்று ‘அடிப்படை மனித உரிமைகள் மீறலுக்கு எதிரான அமைப்பு’பின் பெயரில் ஒரு கண்டன கூட்டத்தை நடாத்தினோம். புலிகளின் பக்கத்தில் இருந்து பலத்த எதிர்ப்பையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டோம். இது நடந்து சில வாரங்களின் பின் சில உண்மைகள் வெளிவந்தன. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு இளைஞரே முன் வந்து இத் தகவலை எங்களுக்கு தந்தார். இந்த இளைஞருக்கு இத்தாக்குதலின் பின்னேதான் என்னைப்பற்றிய முழுவிபரமும் தெரிந்தது.

இவரின் அண்ணன் இந்தியாவில் என் நண்பனாக இருந்தவர். நான் தாக்கப்பட்ட செய்தி இந்தியாவிலிருந்த என் நண்பனுக்கு தெரிந்தபோது அதில் தன் தம்பியும் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அவர் தன் தம்பியோடு தொடர்பு கொண்டு விசாரித்தபோது உண்மைகள் வெளிவந்தன. இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு அந்த நான்கு இளைஞர்களையும் பயன்படுத்தியது சோபாசக்தியும் இன்று பிள்ளையானின் ஆலோசகராக இருக்கும் எம். ஆர் ஸ்ராலின் என்ற ஞானமும் என்பதாகும். இவர்களுக்கு துணையாக சுகனும் தேவதாசும் இருந்துள்ளனர். நான் தாக்கப்பட்டு சில நாட்களின் பின் மீண்டும் என்னையும் நண்பன் கலைச்செல்வனையும் தாக்கும்படி இந்த நால்வரும் அந்த இளைஞர்களை அனுகியுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்ட விடயமும் அந்த இளைஞர் மூலம் வெளிவந்தது. எனவே இவ்வாறான வன்முறை சார்ந்த செயற்பாடுகள் சோபாசக்தி ராகவன் போன்றோருக்கு புதியவை அல்ல.

சோபாசக்தி, ராகவன் ஆகியோரின்  புகலிட வருகைக்கு பின்பே இங்கு மாற்றுத்தளத்தில் இயங்கிக் கொண்டிருந்த புகலிட இலக்கிய அரசியலாளர்களிடம் முரண்பாடுகளும் குழுவாதங்களும் உருவாகத் தொடங்கின. மற்றவர்களின் தனிமனித பலவீனங்களை கண்டறிந்து அதற்கேற்றவாறு ‘தீனிபோடும்’ சோபாசக்தி புலிகளின் பாசறையில் கற்றுத் தேர்ந்த அந்தக்’கலையை’ மிகவும் கட்சிதமாக இங்கும் தமிழ் நாட்டிலும் நடைமுறைப்படுத்துகின்றார்.

தனிநபர் தாக்குதல்கள் எமது நோக்கமல்ல  ஆனால் தனிநபர்கள் வன்முறை அரசியலை பிரதிநிதிதுவப் படுத்தி  மிரட்டும் போது அவர்களை அம்பலப்படுத்துவது ஜனநாயகத்தில் விருப்புள்ள ஒவ்வொரு மனிதனதும் சமூகக் கடமையாகும்.

புலிகள் வன்முறைத் தர்பார் நடாத்திக்கொண்டிருந்த 80 களில்  சிறிலங்கா அரசைக் காரணம் காட்டியே மௌனிகளாக்கப்பட்டோம்.  மீண்டும் ஜனநாயகத்தின் பேரால் அதே வன்முறை தலைவிரித்தாடும் போது புலிகளைக் காரணம்காட்டி புத்தர்களாக தியானிக்கக் கோருவது நியாயமற்றது.

குறிப்பு: தீராநதியில் வெளிவந்த என்னால் எழுதப்பட்ட ‘அ.மார்க்ஸக்கு திறந்த கடிதத்திற்கு’ திருவாளர் சோபாசக்தி அவர்கள் தன்னுடைய வழமையான பாணியில் எழுதிய புனைவுகளுக்கு என் எதிர்வினை விரைவில் வெளிவர இருக்கிறது. அதில் புகலிட இலக்கிய அரசியல் முரண்பாடுகள் சோபாசக்தியின் வன்முறை நடவடிக்கைகள் பற்றி எழுத இருப்பதால் அவற்றை இங்கு 
விபரிப்பதை தவிர்த்துள்ளேன்


***************


ராகவன்:

“ஊகச் சுதந்திரம்”

கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை மலின ‘விலை’க்கு விற்று வேறு இணையங்களில் பதிவுக்குள்ளாக்கி, பின்னர் தமிழாக்கி அதனைச் செய்தியாக்கி, வதந்தி பரப்பும் ‘தேசம் நெற்’றின் இழி நடத்தையை ‘ஊடகச் சுதந்திரமெ’ன்று பெயரிட்டு அதற்கான விளக்க உரை கொடுப்பதாகச் சொல்லி கடந்த 16.11.08 அன்று ‘தேசம்நெற்’ ஏற்பாட்டில் லண்டனில் கூட்டமொன்று நிகழ்ந்தது.


‘தேச’பிதாக்கள் சேனன், ஜெயபாலன், கொன்ஸ்ரன்ரைன், சோதிலிங்கம் வீற்றிருக்க, புதியவன் தலைமை தாங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போகாமலேயே கூட்டத்தில் நடந்தவையென்று வதந்திகளைக் கசியவிடும் ‘தேசம்’ பாணி ஊத்தைவேலை செய்து எனக்குப் பழக்கமில்லை. அதனை ‘ஊக’ சுதந்திரமாக தேசம் வரித்து ‘ஊடக’ சுதந்திரமாக வசைகளை வாரி இறைக்கும் பாணியும் எனக்கு பழக்கமில்லை.


இந்த விசர் கூத்துப் பார்ப்பதற்கு எனக்கு முதலில் விருப்பம் இருக்கவில்லை. முதல்நாள் குறும்பட விழாவில் கலந்து கொண்டபோது சபேசன், கெங்கா ஆகியோர் ‘நீங்கள் வர வேண்டும்’ என கேட்டபோது எனக்குள் ‘போய் பார்த்து நாலு கேள்வியை கேட்டால் என்ன’ என்று ஒரு சலனம். நண்பர் கீரன் ‘தூங்குகிறவனை எழுப்பலாம் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது’ என்ற முதுமொழியில் அபாரநம்பிக்கை வைத்திருந்ததால் அவர் இந்த மலின நாடகத்தை பார்ப்பது வீணே பொழுதைப் பாழடிக்கும் செயல் எனச் சொல்லியிருந்தார்.


எனது சகோதரர்கள் இருவர் என்மீது தேசம்நெற்றால் சுமத்தப்பட்ட பழிகளால் மன அழுத்தங்களுடனிருந்தார்கள். அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து தங்களது கண்டனங்களைத் தெரிவிக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் அங்கிருந்தபடியே என்னையும் கூட்டத்திற்கு வருமாறு தொலைபேசியில் வற்புறுத்தினார்கள். முதல் நாளில் தோன்றிய சலனம் இப்போது முற்றி அது என்னையும் அந்தக் கூட்டத்திற்கு அழைத்துப் போயிற்று.
அப்போது ஆறு மணிக்கு மேலாகியிருக்கும். நான் போயிருந்தபோது நாவலன் தனது உரையை முடித்திருந்தார். அவர் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. விவாதக்களம் திறக்கப்பட்டது. பலர் தேசத்தின் பின்னூட்டப் பகுதி மோசமானது என்றனர். “தேசம் தனக்கு ஒரு ‘அஜென்டாவை’ வைத்துக்கொண்டு மற்றவர்களை அதனை அங்கீகரிக்க கேடகிறது” என்றார் சந்திரகுமார். “ஒரு ஊடகத்திற்கு அறம், பொறுப்புணர்வு செய்திகளின் நமபகத்தன்மையை உறுதிசெய்தல் ஆகியன அவசியம், அது தேசத்திடம் இல்லை” என்றார் தவராஜா. ஜென்னி “புனை பெயரில் எழுதுவதன் காரணம் மரண ஆபத்தை தடுக்கவே, தேசம் ஒருவருடம் காலடி வைப்பதற்கு வாழ்த்துகள், இணையத்தளம் வீதிநாடகம் நடத்துமளவுக்கு தன்னை விரித்துக்கொண்டது ஆரோக்கியமான நிகழ்வு” என தேசத்தை பற்றிய புகழாரத்தை சூட்டினார்.


ஜென்னி, நாவலன், மற்றும் தேசம் ஆசிரியர்கள் தவிர வந்தவர்களில் பெரும்பாலோர் தேசம் நாசம் செய்வதாகவே அபிப்பிராயப்பட்டனர். 20 -25 பேர்வரை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். “தேசம் பிழை விட்டு வருகிறது, அது திருந்தவேண்டும்” என்ற பழைய பல்லவியே எனது கருத்துகளையும் கேள்விகளையும் நான் முன் வைக்கும் வரை அந்த நாடகத்தின் ‘மெயின் ஸ்கிரிப்டாக’ இருந்தது.


சில மாதங்களிற்கு முன் ‘கலைச்செல்வன் நினைவு ‘ நிகழ்வில் தேசத்தைத் திருத்தலாமென கனவு கண்டவர்கள் சில காத்திரமான விடயங்களை முன்வைக்க, ‘தேசத்திற்கு தடை! தேசத்தை படியாதே! பார்க்க்காதே! எனப் பாரிஸ் கூட்டத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆப்பு’ எனத் திரித்து வெளியிட்ட தேசத்தின் பொறுப்பின்மையும் கயமையும் எனக்கு நினைவுக்கு வந்தது.


நாடக இயக்குனர்கள் பல தயாரிப்புகள், அறிக்கைகள் சகிதமாக வந்திருந்தனர். ‘அவதூறுகளுக்கு பதில்’ என்ற கூட்டறிக்கைக்கு மார்க்கட்டிங் சர்வே பாணியில் புள்ளி விபரங்கள் திரட்டி வந்திருந்தனர். எனக்கு தயாரிப்புகள் தேவையாக இருக்கவில்லை. ஏனெனில் அந்த மலின நாடகத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் தேவை எனக்கு இருக்கவில்லை. அங்கு தத்துவ உசாவலோ, அரசியல் கலந்துரையாடலோ சமூக கரிசனை கொண்ட பிரச்சனையோ விவாதிக்கப்படயிருந்தால் அதற்கு நிச்சயம் தயாரிப்பு அவசியம். அந்த தேவை அங்கு இருக்கவில்லை. நான் அங்கு சென்ற பின்பாகக் கூட்டத்தில் நிகழ்ந்தவற்றில் எனது நினைவுகளில் இருப்பதை மட்டும் இங்கு தருகிறேன். விடுபடல்கள், தவறுகள் கூட இருக்கலாம். நாடகத்தின் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.


தேசத்தின் புனைவுகளுக்கு உறுதுணையாக நின்று உழைத்தவர்களில் நாவலன் குறிப்பிடத்தக்கவர். “இன்டர்நெட் ரவுடி எனத் தன்னைச் சொல்லிப் பெருமை படுபவர் நாவலன்” என ஜெயபாலன் என்னிடம் ஒருமுறை கூறி இருக்கிறார். பெண்கள் பற்றி, தலித்தியல் பற்றி SLDF பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் அதன் பின் தொடர்ந்த மோசமான் பின்னூட்டங்கள் பற்றி அறிவதற்கு கம்ப சூத்திரம் தேவையில்லை. இவர் எழுதிய பின்னூட்டங்களை எந்தப் பெயர்களில் எழுதியிருக்கிறார் என்பதைத் தேசத்தின் ‘தல’ ஜெயபாலன் என்னிடம் முன்னரொரு காலத்தில் தெரிவித்திருக்கிறார். அடுத்தவரோடு பேசுவதையெல்லாம் ‘ரெக்கோர்ட்’ செய்து வைக்கும் கில்லாடிப் பழக்கமெல்லாம் என்னிடம் கிடையாததால் ஜெயபாலன் சொன்னவற்றுக்கு என்னிடம் இப்போது ஆதாரங்களில்லை. அவை காற்றிலே கலந்த சொற்கள். எனினும் “யாரைநோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்” என்ற கட்டுரையை எழுதிய ‘புகழை’ நாவலன் தனக்கு எடுத்திருந்தது அனைவருக்கும் தெரியும்.


நாவலனை முகத்துக்கு நேரே அயோக்கியன் என விளித்துத்தான் நான் எனது கேள்விகளையும் கருத்துகளையும் சொல்லத் தொடங்கினேன். ‘அயோக்கியன்’ என்ற சொல் சபைக்கு பொருத்தமில்லை என்பதால் மலின நாடகமாக இருந்தாலும் சபைக்கு கட்டுப்பட வேண்டுமென்ற ஜனநாயக மரபின்படி அவ்வார்த்தையை நான் மீளப் பெற வேண்டியிருந்தது .


“‘ரமிழ் அபையர்’ என்ற இன்னொரு மலின ஊடகத்தில் ஆங்கிலத்தில் வந்த பொய்ச் செய்தியொன்றை SLDFபினர் தமிழில் அறிக்கை விடுவதில்லை என முதலைக்கண்ணீர் வடிக்கும் கூட்டத்தினர் அவசர அவசரமாக தமிழாக்கம் செய்து ‘இனியொரு.com’ என்ற இன்னொரு வெள்ளை வேட்டி இணையத்தளத்தில் பிரசுரித்து, அதனை மேற்கோள்காட்டி நாவலன் என்ற அயோகியன் ‘யாரைநோவது யார்க்கெடுத்துரைப்பது’ என்ற தலைப்பில் SLDF அமைப்பில் இருந்தவர்கள் மாற்றுக் கருத்தின் சொத்தான TBCயை உடைத்தார்கள் என்ற செய்தி வந்ததற்கு மெளனம் காக்கிறார்கள் எனறும், ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் வன்முறைக் கும்பல் என்றும் நெடுங்குருதி வழிகிறதென்றும் பல்வேறு விடயங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் பாணியில் செய்து பின்னர் பின்னூட்ட சாக்கடையை திறந்து விட்டு என்னையும் எனது நண்பர்கள் கீரனையும், நீதியையும் திருடர்கள் என்றும் நட்டஈடு கொடு! என்றும் அவதூறு கிளப்பியதற்கு காரணகர்த்தா நாவலன். அதற்குச் சந்தோசமாகச் சாமரம் வீசியது தேசம். இது நிகழ்ந்த காலகட்டம் முக்கியமானது: கீரனின் தாயாரின் மரணச்சடங்கில் இதற்கான அடித்தளம் இடப்பட்டு, ஜெயதேவனுக்கு தகவல் சொல்லப்பட்டு ‘ரமிழ் அபையரில்’ வரப்பண்ணி, பின்னர் மொழி பெயர்த்து தமிழாக்கி ‘யாரைநோவோம்’ என அழகு படுத்தி அரங்குக்கு விடப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட செயல். தேசம் தவறுதலாக செய்த விடயமில்லை” என்றேன் நான்.


கூட்டத்தில் அமர்ந்திருந்த TBC வானொலியின் பணப்பாளர் ராம்ராஜிடம் நான் பகிரங்கமாக இவ்வாறு கேட்டேன்: “TBC” உடைக்கப்பட்டபோது TBC க்கு கீரன் உட்பட நாங்கள் பண உதவி செய்திருக்கிறோம். சுவிற்சர்லாண்டில் TBC பணிப்பாளர் சிறைவைக்கப்பட்டபோது ‘தல’ ஜெயபாலன், உதயன் பத்திரிகையில் ‘கிறிமினல் குற்றச்சாட்டில் ராம்ராஜ் பிடிபட்டிருப்பதாக செய்திவிடும் தருணம், பிடிபட்டது எதற்கு என ஆய்வை மேற்கொள்ளாமல் முதலில் உங்களுக்காக ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்ய நானும் நிர்மலாவும் முயற்சித்தோம். நீங்கள் நம்புகிறீர்களா TBC உடைப்பில் எங்களுக்குத் தொடர்பு உள்ளதென?”.


எனது நேரடியான பகிரங்கமான கேள்விக்குப் பணிப்பாளர் பதில் எதுவும் சொன்னாரில்லை. அவர் எதுவும் பேசவில்லை. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய புதியவன் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தபோதும் ராம்ராஜ் மெளனத்தை கலைக்கவில்லை.


அடுத்ததாக நான் “மாற்றுக்கருத்தளர்கள் மேல் அவதூறு செய்பவர் எனக் கூறப்படும் சேதுவின் ஆதாரத்தை வைத்து நீங்கள் புனைந்த கதை அவதூறு இல்லாமல் வேறு என்ன? என் று கேட்டேன். பலருக்கு எனது நேரடியான கருத்துக்கள் அதிர்ச்சியைத் தந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சபையில் ‘நோகாமல்’ பேசவேண்டும் என்ற உணர்வு பார்வையாளர்களிடம் இருந்தது. அவர்கள் தேசத்தின் அவதூறுக் கலாச்சாரத்தை கண்டித்தாலும் சமரசமாகப் பிரச்சனையைத் தீர்க்கவே அவர்கள் யோசித்தார்கள். தேசம் அறியாமல் தவறு விட்டிருந்தால் இம்முயற்சி வெற்றியளித்திருக்கக் கூடும். ஆனால் திட்டமிட்டு அவதூறுகளைப் புனைந்து சேது போன்ற நம்பகமற்றவர்களின் சம்பாசணையை எடுத்து ஆதாரமாக வைக்கும் கயமைத்தனத்திற்கு சமரசம் தீர்வாகாது. நாங்கள் வெறும் யுத்த நிறுத்தத்தைக் கேட்கவில்லை. தீர்வுப் பொதியுடன் கொண்ட யுத்த நிறுத்தத்தை தான் கேட்டுப் பழக்கம். எனவே இதற்கு அதிர்ச்சி வைத்தியமும் அவசியம்.


ராஜன் என்பவரை ஆதாரமாக வைத்து ‘ஈஸ்ட் காமி’ல் உரையாடல் செய்ததை தேசம் உறுதிப்படுத்தாவிட்டாலும் இந்த விடயங்களை வாசித்து வருபவர்களுக்கு ஊகம் செய்வது அப்படிப் பெரும் கடினமல்ல. இந்த உரையாடலின் போது துணை மேயர் போல் சத்தியநேசனும் உடனிருந்தார் என்று தேசம் குறிப்பிட்டிருந்தது. அவருக்கு நான் ஒரு ஈ மெயில் அனுப்பி இந்த விடயத்தை வெளிக்கொண்டு வருமாறு கேட்டிருந்தேன். பதில் இன்னும் வரவில்லை. ஆனால் கீரனிடம் அவர் சொன்னது ஏற்கெனவே பதிவாகி இருக்கிறது. TBCயை உடைத்ததாகத் தேசம் ஜெயபாலனிடம் ஒப்புக்கொள்ளும் இந்த ராஜனைத்தான் நீங்கள் அகதிகளுக்கு உதவுபவர், சமூக சேவையாளர் என்று தேசத்தில் எழுதுகிறீர்கள். அவர் உண்மை பேச மறுப்பவர் என்பது வெள்ளிடைமலை. அவரது ஆதாரம் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?” என்றேன். யாருக்கும் பதில் சொல்ல திராணியில்லை. “ராகவன் ஆணித்தரமாக விடயங்களை வைத்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும்” எனப் புதியவன் சொன்னபோதும் ‘சமூக அசைவியக்கம்’ தேசம் அசையவில்லை.


அதிகாரத்திற்கெதிராக குரல் எழுப்புவதாக ‘பாவலா’ செய்யும் தேசம் அதிகாரங்கள் இல்லாதவர் மேலேயே துணிந்து அவதூறை செய்தது. சபையில் நேரடியாக எழுப்பிய கேள்விகளுக்கு விடையின்றி தவித்தது. இது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏனெனில் திட்டமிட்டு கதைகளை புனைந்து மாற்றுக் கருத்தாளர்களை அவதூறுசெய்பவர்களையே சாட்சியாக்கி தயாரித்த கயமைத்தனத்திற்கு விடை கொடுப்பது சாத்தியமல்ல. இவ்வாறு எனது விமர்சனங்களும் கேள்விகளும் தொடரத் தொடர தேசத்தின் கண்டறியாத ‘ஜெர்னலினஸ’த்தின் மீது பார்வையாளர்களின் தார்மீகக் கோபமும் தொடர்ந்தது. கெங்கா, சபேசன், சந்திரகுமார், பெளசர், யமுனா ராஜேந்திரன் அனைவரும் தேசத்தின் ஊத்தைப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தனர். “நீங்கள் தான் கட்டுரையை போட்டு பின்னூட்டமும் இடுபவர்கள்” என நான் குற்றம் சாட்டினேன். தங்களுக்கு பின்னூட்டங்கள் நிறைய வருவதாகவும் தாங்கள் அதனை கட்டுப்படுத்டுவதாகவும் சோதி சொன்னார். “நீங்கள் பின்னூடங்களை அழகாகவும் நேர்த்தியாகவும் கட்டுப்படுத்துகிறீர்கள் என்பது உண்மை, ஏனெனில் ‘அந்த ராத்திரிக்கு என்ன சாட்சியம்?’ என்ற அவதூறுக்கு பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட்டன. அதில் ராகவன், கீரன் TBC திருடர்கள் என்று வந்தவற்றைப் பின்னூட்டமாக போட்டுவிட்டு மற்றவற்றைக் கட்டுப்படுத்தல் தான் உங்களின் தணிக்கை தார்மீகம்” என்றேன் நான்.
” ராகவன் நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்” என்று உணர்ச்சி வசப்படடு வார்த்தைகளை சிந்தினார் சேனன். வெள்ளைக்காரன் மாதிரி எனக்குச் சொல்லவேண்டாம் என நான் கேட்டுக்கொண்டதை கலந்து கொண்டவர்கள் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டனர். நான் கேட்ட கேள்விகள் பதிலற்றே போயின.


சேனன் ‘அவதூறுக்கு பெயர் கருத்து சுதந்திரமல்ல’ என்ற கூட்டறிக்கை பற்றிய மார்க்கட்டிங் சர்வே பற்றி பிரஸ்தாபித்தார். ஒரு கூட்டறிக்கையை ஏதோ ஆராச்சிக்கட்டுரையில் தத்துவ பிழைபிடிக்கும் பாணியில் அவரது நாடக அரங்கேற்றம் அமைந்தது. 74 பேர் ஒப்புதல் இட்டு ( ரவியின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்) வந்த ஒரு கூட்டறிக்கை இரண்டு அடிப்படை விடயங்களை கேட்டிருந்தபோதும் அதற்குக்குப் பதில் சொல்லும் அடிப்படை அறமேயற்று கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவர்களை தொந்தரவு செய்து, இரவு பகலாக தொலைபேசி அடித்து, சொன்னவற்றை அரைகுறையாக விளங்கி, முட்டாள்தனமான விளக்கம் ஒன்று விடப்பட்டது.
சேனனின் விளக்கத்தை கேட்ட பெளசர் “நீங்கள் இன்னும் திருந்தவில்லை என்றார். கூட்டறிக்கைக்கான பதிலை நீங்கள் நிதானமாக வும் பொறுப்புணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றார். ஆனால் முதலையும் மூர்க்கனும் கொண்டதை விடுமா! நீங்கள் எல்லோரும் தவறு என்று சொன்னாலும் நாங்கள் ‘ஊடக சுதந்திரம்’ என்ற பெயரைப் பாவித்து அரைவேக்காடு பதிலறிக்கையை விட்டுத்தான் தீருவோமென்று வெளியிட்டது தேசம்.


முடிவாக, என்னை NGO எனத் தேசம் அவதூறு பரப்பியதைக் கடுமையாக எனது சகோதரர் ஒருவர் கண்டிக்க, தேசம் ஆசிரியர் ஜெயபாலன் தனது நாடகத்தைத் தொடங்கினார்.இங்கு தான் கிளைமாக்ஸ்! சோதியின் கமரா குளொசப்பில் “ராகவன் அண்ணனுக்கு தம்பிகள் ஆதரவு கொடுத்தார்கள். எனது அண்ணனை சுட்டு விட்டார்கள்” என ஜெயபாலன் கண்ணீர் உகுக்க இருநிமிட மவுனம். ஜெயபாலனின் சகோதரரின் கொலையை கண்டிப்பதும் அவரது சகோதரர்கள் அதற்காக அழுவதும் பரிகசிக்கப்படக் கூடாதது. துரதிஸ்டவசமாக வடகிழக்கில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதோ காணாமல் போயிருப்பதோ ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. எவர் வீட்டில்தான் இழவு விழவில்லை. கீரன் வீட்டில் விழுந்தது. நீதியின் வீட்டில் விழுந்தது. நிர்மலாவின் வீட்டில் விழுந்தது.கீரனின் குடும்பத்தில் 10 பேர். இன்று மூவரைத் தவிர மீதிப்பேர் உயிருடன் இல்லை. அவரது தாயார் இறந்த வீட்டில் தான் அவதூறுக்கான மேடை அமைக்கப்பட்டது என்பதை நான் நம்புகிறேன். நிர்மலாவின் தங்கையும் சுடப்பட்டவர். நீதியின் தகப்பன் உட்பட 6 பேருக்கு மேல் அவரது குடும்ப அங்கத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கீரன் அய்ந்து வருடங்கள் தடுப்புக் காவலில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர். இவர்களை பார்த்து எவ்வித பொறுப்புமிலாமல் திருடர் என்று சொன்னது ஏன்?


ஜெயபாலனின் துயரில் நான் மட்டுமல்ல அனைவரும் பங்கு கொள்கிறோம். என்றாலும், ஜெயபாலன் கலங்கியது அவ்விடத்தில் பொருத்தமில்லாமல் இருந்தது என்பதே எனது அபிப்பிராயம். இதன் பின் “நானும் கொன்ஸ்டன்டனும் பொது நிறுவனங்கள் பற்றிய விடயங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறோம். அப் லிங்க்ஸ் டீ ஆர் டெக்” என அடுக்கிச் சென்றார் ஜெயபாலன். ‘அப் லிங்ஸ்’ வியாபார நிறுவனம். சிலவேளை SLDF ஒரு வியாபார நிறுவனமென அவர் நினைத்தாரோ தெரியாது.



நிற்க, அவதூறு பற்றியோ ஆதாரங்களின் நமபகத்தன்மை பற்றியோ எவ்வித பதில்களும் அளிக்கப்படவில்லை. தாங்கள் பார்வையாளர்கள் வைத்த விமர்சனங்களை கருத்தில் எடுப்பதாகக் கூற நாடகம் ஒத்திவைக்கப்பட்டது. போல் சத்தியநேசன் ‘கருத்தில் எடுப்போம்’ என்று சொன்னதை ஒரு ஒளிக்கீற்றாக பார்த்து, இது ஒரு ‘பொசிட்டிவ் ஸ்டெப்’ என்றார். ஆனால் நாடகத்தை பார்த்த பலர் நாய் வாலை நிமிர்த்த முடியாதென்றனர். அதனை உறுதி செய்ய அவர்களது அறிக்கையும் பின்னூட்டங்களும் பல்லிகளும் தொடர்கின்றன.ஊடக சுதந்திரம் என்ற பதத்தை தவறாக விளங்கியே இவ்வாறான செயலில் தேசம் ஈடுபடுவதாக யாரும் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல.


‘எதையும் தேவையான போது எழுதுவேன், அதனை தட்டிக்கேட்டால் உடனே ஊடக சுதந்திரம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பேன், அவதூறு செய்வது எனது உரிமை, பொய் செய்தி போடுவது எனது கடமை. உனக்கு வரும அழுத்தங்களுக்கோ பாதிப்புகளுக்கோ நான் பொறுப்பல்ல என்ற திமிர்த்தனமான பதிலே தேசம் ஆசிரியர் குழுவினரிடமிருந்து எமக்குக் கிடைத்திருக்கிறது.

Keine Kommentare: