Dienstag, 29. Januar 2008

மொனராக்கல மடுவுக்கும் பின்பு மடு மொரட்டுவைக்கும்...

மொனராக்கல மற்றும்
மடுக் கொலைகள் சொல்வது என்ன?


அப்பாவி மக்களைப் பலியெடுக்கும் இனப்படுகொலை அரசியலானது இன்றைய இலங்கையை பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய வகைத் தாக்குதலுக்குள் தள்ளியுள்ளது.கடந்தமூன்று தசாப்தமாக நடைபெறும் ஈழத்துக்கான போரின் எதிர்விளைவுகளாக இதை எடுப்பதற்கில்லை.இலங்கையின் மிக அண்மைய அரசியல் நகர்வும் அதுசார்ந்த புலிகளின் தாக்குதல் போக்குகளும், இரண்டுதரப்புக்குமிடையிலான அரசியலின் வெளிப்பாடுதாமோ இப் பாலகர்களின்மீதான வெறித்தனமான தாக்குதல்கள்? இன்றிந்த இனப்படுகொலைகளைப் பார்த்து இப்படித்தான் கேட்கத் தோன்றினுங்கூட இத்தகைய தாக்குதல்களின் பின்னே ஒளிந்திருக்கும் அன்னிய நலன்களும் அவை சார்ந்த அரசியல் சாணாக்கியமும் அப்பாவிகளைத் தமிழரின்-சிங்களவரின் பேரால் அழித்து வருகிறது.இதற்குடந்தையாக விடுதலைவேண்டிப் போராடப் புறப்பட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்துமே இருக்கின்றன.ஒவ்வொரு இயக்கங்களும்-குழுக்களும்,கட்சிகளும் தத்தமது இயக்க-கட்சி நலன்களின் அரசியலை அப்பாவி மக்களின்மீது பலிகளைச் செய்து, தமது எஜமான வேண்டுதலை நிறைவேற்றும்போது சாவதென்னவோ ஏழையெளிய மக்களே.அந்த மக்கள் தமிழைப் பேசினால் என்ன சிங்களத்தைப் பேசினாலென்ன இரண்டினத்தினதும் உடல்களும் உயிரைத்தான் கொண்டிருக்கின்றன.


போரின் அதீத வெளிப்பாடுகள் மக்களை வகைதொகையின்றி வருத்தியபடி அவர்களின் உயிர்களை இனப்படுகொலையாகப் பறித்துவருவதை எந்த மனிதாபிமானமிக்க நபரும் பார்வையாளராக இருந்து மெளனிக்க முடியாது.அப்பாவிப் பள்ளிச் சிறார்கள் மடுவிலும் சரி மொனராக்கலவிலும் சரி இனவாத அரசியலுக்குத் தீனீயாக்க முடியுமென்றால் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலை எந்தத் தேசத்தோடும் ஒப்பிட முடியாதளவு மோசமானவொரு இருண்ட சூழலுக்குள் இருப்பதை நாம் ஊகிக்க முடியும்.உலகம் 21 ஆம் நூற்றாண்டை மனித வேட்டை-நர மாமிசம் புசிக்கும் நூற்றாண்டாகவே பிரகடனப்படுத்தியுள்ளது.இவ் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆவ்கானிஸ்தானை-ஈராக்கை அத்துமீறி அழித்து வரத் தொடங்கிய ஏகாதிபத்திய எரிபொருளுக்கான பெரு வேட்டை, கொத்துக் கொத்தாக மனிதப் பிணங்களை உற்பத்தி பண்ணி வருகிறது.இத்தகையவொரு அரசியலை உலகம் வலிந்துருவாக்கி வைத்தபடி இன்றைய தேசிய இன விடுதலைப் போரையும் அத்தகையவொரு சதிமிகு நலன்களுக்குடந்தையாக்கி எமது மண்ணில் குருதியாற்றைத் தொடர்ந்து ஓட வைத்திருக்கிறது.

எப்பகுதியிலும் மனிதர்களைக் கொல்லுதல் மிகச் சாதரணமான விடையமாகப் போயுள்ளது!

பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது.இந்த அரசியல் இலக்குக்கிசைவாகக் காரியமாற்றும் மூன்றாமுலக அரசியல் மற்றும் பெருங்கட்சிகள் தமது மக்களின் உண்மையான எதிரியாக மாறியுள்ளது.இதுவொரு மிக மோசமான புறச் சூழலை அமைதியாக வாழும் இனங்களுக்கிடையில் தோற்றி வைத்து,அதுசார்ந்து இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளாக வளர்த்துச் சம்பந்தப்பட்ட தேசங்களின் சுய வளர்ச்சியை மெல்லச் சிதைத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியான விளைவுகள்,போர்,பொருளாதார அழிவுகள்,நோய்,நொடி,பட்டுணிச் சாவாக மக்களை அண்டும்போது தேசத்தின் மிகப் பொதுவான மனிதவளம் நோய்வாய்க்குட்பட்டுத் தேசத்தின் சுய ஆளுமை அழிந்து தேசம் அன்னியத் தயவில் சுயசார்பிழந்து தங்கி வாழும் இனத்தை உற்பத்தி பண்ணுகிறது.இங்கே, தொடர்ச்சியான யுத்தத்துள் இருத்தி வைப்பதற்காகவும் தமது பழைய-கழிவு ஆயுதங்களை விற்றுக் காசாக்கவுமாக மூன்றாம் உலகத்தில் செயற்கையான முரண்பாடுகளையும் அதுசார்ந்த யுத்தத்தையும் ஏகாதிபத்தியக் கம்பனிகள் தொடக்கி வைத்திருக்கின்றன.

இதன் தொடர்ச்சியில் மையங்கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திர அரசியலானது என்றைக்கும் மூன்றாமுலகத்தில் அமைதியும் சமாதானம் மலர விருப்பமுற்றே இருக்கிறது.இது, தான் உற்பத்தி செய்வதற்கானவொரு இனமாகத் தமது தேசத்தைக் கட்டி வளர்த்தபடி மற்றைய கீழத்தேய வலயத்தை மூலதனத்தைச் சுரண்டும் வலயங்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.இத்தகைய அரசியலைப் புரிந்து கொள்ள ஆபிரிக்கக்கண்ட கொங்கோ தேசமே நல்ல உதாரணமாக இருக்கிறது.

இத்தகையவொரு இருண்ட பொருளாதார நலன்சார்ந்த யுத்தம் நமது தேசத்தில் அப்பாவிக் குழந்தைகளை இனப்படுகொலையாகக் கொன்று குவிப்பதற்குச் சிங்கள-தமிழ் இனங்களின் நலன்களின் வாயிலாக எழும் முரண்பாடாக எவரும் பார்ப்பாராகின், எமது இத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்தவே முடியாது.இது இன்னும் பலிக்குப்பலி அரசியல் வடிவத்தை எட்டி, எமது மண்ணில் என்றைக்குமே அமைதியற்றவொரு சூழலை நிரந்தரமாக்கித் தேசத்தை இராணுவச் சர்வதிகாரத்தின் கீழ் கட்டிப்போடும் அபாயம் நெருங்கி வருகிறது.இதிலிருந்து மீள்வதும்,இனங்களுக்கிடையாலான முரண்பாடுகளின்மீது இலகுவாக ஆதிக்கஞ் செய்யும் அன்னிய நலன்களை வெற்றிகொண்டபடி இலங்கையில் பல்லினங்களும் பரஸ்பர நட்புறவோடு வாழ்வை முன்னெடுப்பது அவசியமானவொரு அதி மானுடத் தேவையாகவே இன்றிருக்கிறது.


இனப்படு கொலை அரசியலானது அப்பாவி மழலைகள்மீது பயங்கரத்தனமான தாக்குதல்களைத் தொடுத்து அவர்களது கனவைச் சிதைப்பதை நாம் தொடர்ந்து"அடிக்கு அடி-இனப் படுகொலைக்குக் கொலை"எனும்படி அனுமதிப்போமானால் இலங்கையில் எந்தவொரு இனமும் தனது நிம்மதியை-நிலைத் வாழ்வைத் தக்கவைக்க முடியாது!இது எமது தேசத்தைக் குட்டிச் சுவாராக்க எண்ணும் அன்னிய ஆளும் வர்க்கங்களுக்கும் இலங்கையின் தரகு ஆளும் கும்பலுக்குமான வேட்டைக் காடாகவும் அவர்களின் குடும்ப நலன்களுக்கான கொலைகளுமாகப் படுகொலைகள் பரந்த அரசியல் பழிவாங்கலாக நம்மைப் பூண்டோடு அழிப்பதாக முன் நகரும்.இத்தகைய போராட்டச் செல்நெறி ஒருபோதும் தமிழருக்கான-இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலையைத் தரப்போவதில்லை.மாறாக, நமக்கு இன்னும் பல தசாப்த காலத்துக்கு இதே அழிவு வாழ்வைத் தந்து நமது வரலாறே சுடுகாடாகும்!


இதை தடுப்பதற்கான ஒரு அரசியல், இலங்கையின் இனங்களுக்கிடையலான முரண்பாட்டை முடிவுக்குக்கொணரும் இனவிடுதலைசார்ந்த சுய நிர்ணயத்தை அங்கீகரிப்பதும், சுய ஆட்சியுடைய வலயங்களை உருவாக்குவதுமே இன்றைய மூன்றாமுலகத்தின் முன் இருக்கும் அரசியல் பணி.இதைச் செய்து முடிக்கும் தகமை இனங்களுக்கிடையலான ஒற்றைமையின் இருப்பிலே சாத்தியமாகும்.இந்த ஒற்றுமையைக் குலைப்பதே அன்னிய நலன்களின் பெருவிருப்பு.நாம் இதை வெற்றிகொள்வது அவசியம்.அங்ஙனம் வெற்றி கொள்ளாதவரை மொனராக்கல மடுவுக்கும் பின்பு, மடு மொரட்டுவைக்கும் அதுவே பின்பு மாந்தைக்குமாகச் சுழன்றடிக்கும் இனப்படுகொலையாக.

நிர்மாணம்
29.01.2008

Montag, 21. Januar 2008

குடுமிச் சண்டையில் ஒரு கூத்து!

குடுமிச் சண்டையில் ஒரு கூத்து!


ஆரவாரத்தின் விளிம்பில்
சில அறிமுகங்கள்
அடுத்தவனின் குடிலில் தொங்கும்
இன்னொருவனின் சொத்து
அதையும் உரிமம் கொள் புயல் வீச்சு


அனைத்துக்கும்
அவசியமில்லாச் சண்டையிட
"தர்ம நியாய" அண்ணனும்
தம்பிகளும்...
அங்கே,
அடித்து நொருக்கும் திசையில்
ஆராரோ நம்மை அழித்தபடி


நான் சொன்னாலென்ன
அல்ல
நீ சொன்னாலென்ன?
கொக்கரிப்பதால் கேடு எமக்குத்தான்
கருத்து வளையங்கள் மாட்டுவதற்கு அழகுதான்
ஆனால்இ
சாவதென்னவோ மானிடமல்லவா?





எதையும் சரியாகச் செய்துவிட
இதுவொன்றும் எதிரிகளற்ற பெரு வெளியல்ல
குடும்பத்துக்குள்ளேயே பாரிய எதிரிகள் இருக்க
இணையக் குடிகளுக்குள்...
குட்டிப்பார்ப்பதால் கோவணம் கிழியலாம்
கோட்டையைப் பிடிக்க முடியுமோ?


அந்தந்தத் தளத்துக்கு அவசியங்கள் அடுக்காய்
வெளித் தள்ளப்படும் குற்றக் கம்பத்தில்
கட்டப்படும் அறிவுக்கு நெத்திச் சூடு!
நெருப்பிலிட்டுச் சாம்பலை நெற்றியில் அணியச்
சில முனைப்புகள்!


ஏங்கிக் கிடக்கும்
மக்களின் பெயரில்
நாம்
வேட்டைக்குப் புறப்பட்டோம்
இடையினில் புகுந்த
கரடியின் வலுக் கரத்தால் சிதறிக் கொண்டோம்


இன்னும் கரடிகள் கூட்டம்
நமது வாசலில்
காட்டிலிருந்து வீடு மீளக் கனவிலும் நினைக்கா நாமோ
நடுக்காட்டில் குடுமிச் சண்டையில்...


கரடிகளின் கனவுகள் வலுத்தபடி
கண்ணீரில் மிதக்கும் மக்களின் முதுகில் சவாரியிட
சாவதற்கும் சில பாலகர்கள்...


இவர்களின் பெயரால்
நானும்இநீயும்
நடுத்தெருவில்...

Samstag, 12. Januar 2008

உடல்களின் சரிவில் எண்ணிக்கை வைத்து

உடல்களின் சரிவில்
எண்ணிக்கை வைத்து...


போரிடும் தரணங்கள்

செத்தவர்கள் செத்தவர்களாகச்
சேதி காவிவரும் சிங்களக் கனவு
சொல்லித் தெரியவும்,சொல்லாமற் தெரியவும்
இலங்கையில் பல உள.

இது போரரசியல்.

எனக்கும்
என் தலைமுறைக்கும் வாழ்வு கற்பிக்கும் போரரசியல்
ஒவ்வொரு தலைகளின் வீழ்ச்சியிலும்
என் தேசத்தின் இருப்பையுதிர்த்தபடியே
வாழ்வைத் தின்று பிணங்களாய்க் கழிக்கிறது!


நரம்பு புடைக்கும் எந்த மொழியும் நம்மிடமில்லை
விழித்திரையில் குத்தி மோதும்
கொடுங் கணங்களும்
கோரத் தாண்டவம் ஆடும் சிங்களக் கூத்தும்
காலத்தைக் கொன்று
கடமைக்காய் உயிர் குடிக்கும்
அது தமிழின் தரப்புக்கும் நிரந்தரமானவொரு பொழுதாய்...

யார்தான் மகிழ்வார்
உடல்களின் சரிவில் எண்ணிக்கை வைத்து?


ஒவ்வொரு விடியலிலும்
உருவமே தெரியாத மரணங்கள்
கதவின் துவாரத்து வழியே
உயிர்த்திருப்பவர் உணர்வை மோத
உறக்கமின்றித் தவித்த இரவுகளில்
குருதி சிந்தும் கொடிய போர்
இச்சைப்பட்டுச் சப்பித் துப்பும்
கழிவுகளாய் மனிதவுடல்கள்


சுனாமிக்கு முன்னும்,
பின்னும்
மலிந்த கொலைகளும்
சிதைந்த பிணங்களின்
ஊனிழந்த எலும்புத் துண்டுகளும்
தமிழரின்
உரிமை தின்ற
காலடித் தடங்காளாய்
இன்னும்
சில போரிடும் தரணம் வரை...

பிணங்களின்மீதேறி
பெருமை சொல்லும் தேச நலன்
வாகரையைப் பிடித்தாலென்ன
இல்லை வன்னியைப் பிடித்தாலென்ன?
".........................."