Dienstag, 27. November 2007

அண்டத்துள் துயிலுங்கள் ஆழ்ந்து!

அண்டத்துள்
துயிலுங்கள்
ஆழ்ந்து!


ல்லாம் கலைந்த பொழுதொன்றில்
நடுத்தெருவில் நிற்கும் ஒரு உணர்வு
அந்தத் தெருவோரம் ஏதோவொரு வருகைக்காக எவரெவரோ காத்திருப்பு
கடைசியில் எல்லாஞ் சிதைந்து
சாயம் வெளுத்த துணியாக எனது மனது

நிமிர்ந்து வானத்தைப் பார்க்கிறேன்
மழைமேகமிழந்த வெளியில் சூரியனின் வருகை தாமதமாக இருக்கிறது
கடுங் காற்று வீசுவதென்று நமது பெரியவர் சொல்வதும்
அந்தக் காற்றைத் தாம் அறிவதென்றும்
தம்மிடம் பெருங் காப்புக் கவசம் இருப்பதென்றும் வார்த்தையில் சொன்னார்

வட்டமிடும் கழுகுகள் அவர் குரலைத் தடுத்தன
அவை கக்கிய ஏதோவொரு பொருளால்
பெரு வெடியின் அதிர்வில் பேரண்டம் தோன்றியதாகவும்
அந்தப் பேரண்டம் இனியும் சுருங்கி வருவதாகவும்
விஞ்ஞானிகள் கூறிக் கொள்கிறார்கள்!

பழைய விலாசத்தில் பத்துப் பேர்கள், தலைகள் இருக்கலாம்
பாய் விரித்துப்படுக்க எண்பது மில்லியன் தமிழர்கள் எண்ணப்படலாம்
பாட்டு வாத்தியங்கள் இல்லாமல் பல்லவிகள் பாடப்படலாம்
பாருக்குள் நீதி இருப்பதாகச் சொல்வதில்தான் பரிதாபம் தெரிகிறது


புட்டுக் கொண்ட பேரவாப் புலம்பல்கள்
போருக்குள் மாண்ட இதயத்தின் விளிம்பில் இரக்கத்தைத்தான் கூட்டுகிறது!
எத்தனையோ பொழுதுகளில்
வீரத்திலிருந்து வான்முட்டும் கர்ஜனைகள்
வாய்ப் பந்தல் கதையாய் அந்த வானமும் சுருங்கி
தனக்குள் ஒடுங்கும் காலத்தின் எதிர்வு முகத்தில் ஓங்க
கண்ட இடமெல்லாம் தாண்டித் தயங்காத விஞ்ஞானத்திலும்
ஒரு கையை வைத்துச் சுவைத்தபோது
துரும்பைப் பிடித்தபடி ஆற்றிலிறங்கும் பெரியவர்

சர்வதேசத்துக்குள் இன்னும் நீதியைத் தேடி
நிலை பெற்ற பொழுதொன்றில் பொறிக்கிடங்கைக் கண்டபோது
பொறுப்புகள் பொங்கித் தாண்டவமாடுகிறதாம்
பொல்லாத பொழுதுகளும்
பொய்மைப் பேச்சுகளும்
வட்டத்தில் நிலை குத்தி
கொட்டத்தில் காட்டிய பேரெழிச்சித் தாண்டவமாய்த் தாண்ட
புதுவுலகச் சாம்பிராச்சியத்துள் நீட்டியுறங்குதாம் சமாதானப் புறா!

இருப்பிடமிழந்த தெருவோரத்து நாயாகிய எனது முகத்தில் சலிப்பு
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கத்தில் கனவுதரித்தாவது அந்தச் சுகத்தைத் தராதோவென்றொரு நப்பாசை
நாமிருக்கும் கோலத்தில் கூட்டிக் கழித்து
ஊதிப் பெருக்கி மடக்கி வகுப்பதைத் தவிர வேறென்ன செய்ய?

அண்டத்துள் துயிலுங்கள் ஆழ்ந்து
துன்பத்தில் நாமிருந்து
தூங்கித் தவிக்கும் பொழுதுகளிலாவது உங்கள்
புதிய வரவில்
பூத்துக் குலங்கும் தேசத்து விடியல்
எட்டுவதற்காகவேனும் இப்போது ஓய்ந்தெழுக!

நிர்மாணம்
27.11.2007

Sonntag, 25. November 2007

கிழக்கின் சுய நிர்ணயம் கொட்டும் கோடிகள்!

கிழக்கின்
சுயநிர்ணயம்
கொட்டும் கோடிகள்!


கேட்பாரின்றிக் கேணிகள்
விதைப்பாரின்றிக் காடாய் வயற்பரப்புகள்
வாத்தியாரின்றிப் பள்ளிகள்
வாழ்விழந்த ஏசு குருசு மரத்தில் தொங்கியபடி
தமிழ் தனித்தபடி தேசத்துள் விடுதலை தேடி...

எண்ணப்பட்ட தலைகளின் சரிவில்
மாவீரர் தினங்கள் வந்து போகும்
குருதிச் சேறு அப்பிய குழந்தை முகங்கள்
கொல்வதற்கேற்ற கூட்டுப் பிராத்தனை
தனித்த தேசம் சுய நிர்ணயம் தமிழீழம்!

பயங்கரவாதக் கதைப் புனைவில்
காலத்தை ஓட்டும் சிங்களக் கொடும் யுத்தம்
எக் காலத்துக்குமானவொரு தேசக் கதாநாயகர்
இவர்களுள் கையூட்டுப் பெற்றவர்களின்
பிரதேசக் கதாகலாட்ஷேபம்

காரியத்து மூளைக்குக் கதைக்க
ஒரு வடபகுதியும்,வன்னியும்
வாழ்விழந்தாகச் சொல்லவொரு கிழக்கும்
பெரும் பசைகள் வலுக்க வந்தது
இலண்டனுக்கும் பாரீசுக்கும்?

ஆரூ கண்டார்?
ஆட்களைக் கடத்தியவர்களுக்கு
நோட்டுக்களைக் கடத்தவா சுணக்கம்?
சும்மா சொல்லக் கூடாது
சுகமாய் இருக்க மக்களின் சோகம்
சொல்லிக் கொள்ளப்"புலிகளின்" அராஜகம்
வடக்கின் மேலாதிக்கம்!!

வண்டு திசை பார்த்துப் பூவொன்றில்
வயலும் வரப்பும் வாழ்வளித்த குறுங் குடில்
கிராமத்துக் குறுவாழ்வில்
குலைந்த சோகம்!

தெருவில் பொதியேந்தி
பொழுது படுவதற்குள் திரும்பும்
உழைத்தோய்ந்த முகங்கள்
சுழற்காற்றில் அள்ளப்பட்டது தெருவும்
தேசங்கொண்ட மனங்களும்

எங்கள் தெருவில் நாண்டுநிற்கும் நாவல்மரம்
எப்போதோ அழிந்தொதுங்கிய
நெட்டூரப்பொழுதின் வரவில்
வாழ்விழந்த மாதாவும் மெளனிக்க

இருப்பழியும் கரும் பொழுதொன்றில்
குருசு மரத்தடியில் சரியும் என்னுடலுக்கு
சாவு வந்ததாய்ச் சொல்வதற்கேனும்
என் கிராமத்தில் மனிதருண்டா?
இது"தமிழீழம்"கோசம் செய்த மோசம்?

நான் கனவுதரித்த கிராமம்
தின்னக் கொடுத்து வைக்காத உறவுகள்
பெருநாள் பொழுதொன்றில்
பெயர்த்தெறியப்பட்ட கிராமத்து இருப்பு

கருமேகம் பொழிய
காதல் வயலும் கதிர் முறிக்க
கால் வயிறு நிறைப்பாள் அன்னை
களித்திருப்போம் கஞ்சியில்
எனினும்,
கைக்கூலியாய் இருந்ததில்லைக்
களவும் செய்ததில்லை!

கோழித் "திருடனும்",
வாழைக் குலைக் "கள்ளனும்"
வாழ்வை விளக்குக் கம்பத்தில் தொலைக்கக்
கொலைஞர்கள் கூடிக் குலாவ
கோவணம் நிறைந்த கோடிகள்!

கொடுமை!
கொல்லைப் புறத்தில்
கன்னக் கோல் கொடும் பொழுதில்
கொலைகளை எண்ணக் கொம்யூட்டர்
"கிழக்கின் சுயநிர்ணயம்"
வழங்கும் வங்கிகள் நிறைய...

இப்போதெல்லாம் கிராமம் பட்ணத்தில்
சில்லறை கேட்டுத் தெருவில் தனித்தபடி
குற்றுயிர்கொண்ட குக் கிராமத்துத் திட நெஞ்சு
கூடின்றிக் குலையும்

வன்னியிலும்
பாரிசிலும் இலண்டனிலும்
குருதிதோய்ந்த வலுக்கரங்கள்
வட்டியில் வயிறு வளர்க்கும்
வாழ்விழந்தது வடக்கும் கிழக்கும்.


நிர்மாணம்.
24.11.2007

Freitag, 16. November 2007

எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்!

எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்!


நீல மேகமும்
நெடும் பகற் பொழுதும்
இடுமுள் வேலிதாங்க
தெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும்
கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்!

"போய் வா"என் கோ,பெருந்தகையே!
பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடு
முதிரக் காத்திருக்காது உதிரக் கண்டேன் கனா!
இங்கு ஓடாய் உழைத்தவர் உறக்கம் தொலையும்

மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும்
ஒரு வயிறுண்டு
ஓரத்தில் கொட்டும்
தூசி மேகம்


எதற்காகவோ இருப்பழியும் காலம்
யானுளம் கலங்கி
யாவதும் அறியேன்
ஓதுவதற்கு ஒப்பாருமில்லை
ஒழிக என் கூதற் காலம்!

நெடும் புனல் நீக்கிய மறைப்பில்
துயிலிழந்த தெருவோரத்துக் கண்மாய்
பெரு நரிக்குக் கொண்டாட்டம்
துள்ளிக் குதிக்கும் மீனுக்கு அழிவு
இளநிலாக் காயும்
இருளாற் கவ்வும் இயக்கமும் அதுவாய்

எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்
எங்கேயும் கெந்தகப் புகையுண்ட குறை முகங்கள்
வல்லூறு வட்டமிட
ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது

பொன் திகழ் மேனியொடு பலர் தோன்றி
செங்கோல் காட்டிச் சொல்லிய கதைகளும் ஆறிய கஞ்சி
இருளிடை புகுந்த ஒளிமுதற் கடவன்
கோன்முறை வெடிபட வருபவர்
அடுபுலி அனையவர்
படுகடன் இது?

16.112007

Donnerstag, 1. November 2007

விதியே,விதியே விடுதலை செய்வாய் இவரை?

விதியே,
விதியே
விடுதலை செய்வாய் இவரை?

கைமுனுக்களும்
எல்லாளன்களும்
கதை பேசும்
ஒரு
உலாக் காலத்துக்காய்
இறக்கையிழந்தது தாய்க் கனவு

எல்லாளர்களினதும்
கைமுனுக்களினதும்
பழைய உறவுக்காய்
உதிர்ந்தொதுங்கும்
சில விடிவெள்ளிகள்

எதற்குமே
வீரம்,தீரம்
வியூகம் வகுத்து உருவேற்ற
"உலகத் தமிழர்களே"வணக்கம்!!

ஒரு தெரு விளக்கு
சோம்பல் முறிக்கும் இருண்ட பொழுதில்
கபாலம் பிளந்து,
கால் முறிந்து
கண்ணீரோடு களமாடியது ஈழம்

அரசர்கள்
அவிழ்த்துவிட்ட யுத்தவெளியில்
அரிசிக்கு அலையும் தாயொருத்தி!
அநுராதபுரக் காட்டுக்குள்
கண்ணீரோடு மனதை அனுப்பி
பெற்ற வயிறு பொங்க
பெயர் குறித்த படத்திற்குப் பூவெறிந்தபடி
சில கிழங்கள்...

துட்டக்கைமுனுவுக்கு
எல்லாளன் ஓலை எழுதும்
புதிய வரவில்
போனதென்னவோ
எவளோ வீன்றவுயிர்களெனச் சில முணுமுணுப்பு
தேசியத்துச் சூடடிப்பில்
எருமைக்கு இரக்கமில்லாச் சில கணங்கள்
எழுதிச் சொல்வார்
அந்த,இந்த விமானத்தில்
இருபது சரியாம்
தலைவரா-கொக்கா?


எவனுக்குத் தெரியும்
மரணத்தின் வலி?

கேட்டுப்பார்!

நோட்டுக் கணக்காய்
நீட்டிவைப்பார் வரலாறு
அங்கே விடுதலை
இங்கே விடுதலை உயிரிழந்தே
உருவுற்றதென்பார்

பிறகென்ன?

போய்ப் பார்,
களமாடும் பிஞ்சு விழியுள்
வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தரணம்
இன்னொரு தளத்தில்
வெற்றிக் களிப்பும் சுவைப்பும்!
விதியே,விதியே
விடுதலை செய்வாய் இவரை???