Sonntag, 27. Januar 2013

" தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள்!"

தமிழ்த் தேசியத்தின் கோர முகம் இஃது!

புலிகளால் துரத்தியடித்தல்,வெளியேற்றுதல் தமிழீத்துக்காக.

வட புலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான பரிகாரம் எதுவாக இருக்க வேண்டும்?

புலிவழியாகச் செழித்து வளர்ந்த தமிழ்த் தேசியமானது மிகக்கொடிய பாசிசமாகவுச்சம் பெற்றது 1990 களில்.இதன் தார்ப்பார் சொந்த மண்ணிலிருந்து அப்பாவி முஸ்லீம் மக்களை  அவர்களது வேரோடும்,விழுதோடும் பெயர்த்து தெற்கே வீசியெறிந்து எதிர்காலத்தை அழித்தது,தமிழ்த் தேசியம்.

[  The announcement Liberation Tigers of Tamil Eelam (LTTE - separatist rebels fighting for an independent ethnic Tamil state in the north) made on 29 October 1990: All Muslims in Jaffna Peninsula, which included the capital of the war-hit Northern Province (Jaffna), had 24 hours to leave or face forced expulsion and death.]

இது, நவ மனித நாகரீகத்துக்கே எதிரான மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனம்.நாசிகளுக்கு நிகராகத் தன்னை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் மனிதவதை இது.தமிழ்த் தேசியத்துக்கும் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குமான உறவுப் புள்ளியானது சாரம்சத்துள் இனவழிப்பே!

ஆனால்,தமிழ்த் தேசியமோ சிங்களத் தேசியவாதத்தைவிட மிகவும் கொடியதென்பதற்கு -ஒரு இனத்தை அதனது சொந்த மண்ணிலிருந்து 24 மணி நேரத்துக்குள் குடியெழுப்ப முடியுமென்பதற்கும்-சிங்கள இனவாதமே செய்ய முடியாததை இந்தப் பாசிசப் புலிகள் வழி வளர்ந்து பாசிசமாகவுச்சம் பெற்ற தமிழ்த் தேசியத்தின் கோரமுகமாக இந்த முஸ்லீம் மக்களது அவலம் என்றும் வரலாற்றில் பதியப்படவேண்டும்.


இத்தகைய கொடிய நிகழ்வுக்கான(தமிழ்த் தேசியத்தின்வழி புலிகளால் முல்லீம்களது குடி குலைத்தல்,அழித்தல்,கொலை செய்து அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றித் துரத்தியடித்தல்) சமூகவுளவியலை தமிழ்த் தேசியம் பல் நூறு ஆண்டுகால அநுபவப்பட்ட அதன் சாதியவொடுக்குமுறை பண்பாட்டிலிருந்து பெற்றதென்பதே உண்மையாகும்.



வடபுலத்திலிருந்து  வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள்மீது கணிசமான தமிழ்த் தேசியவாத அநுதாபிகள் அன்று வைத்த பழி சுமத்தல்:" தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள்!"என்ற உரையாடல்-உணர்வு வழியாகப் புலிப்பாசித்தையும்,தமிழ்த் தேசியத்தின் கோர முகத்தையும் அங்கீகரித்து அதை, வளர விட்டுத் தம்மைத் தாமே அழித்திருப்பினும் இந்தத் தமிழினமானது முஸ்லீம் மக்களிடம் பாரிய மன்னிப்பும் நஷ்ட ஈடும் கட்டியாகவேண்டும்.இது அரசியல்ரீதியான சட்டவாதத்துக்குட்பட்ட பகிரங்கமாக இருக்கவேண்டும்.வரலாற்றில் இது பதியப்பட்ட ஆவணமாக என்றும் நிலைக்க வேண்டும்.

அன்று நாசிகள் செய்த இனவழிப்புக்கு நிகரானது இந்த மக்களைத் துரத்தியடித்து அழித்த புலிகளது பாசிசமாகும்.இது,இன்றைய கங்கேரி விக்டர் ஓர்பானுக்கு நிகரானதுங்கூட.அங்கே, சிந்தி - ரோமா மக்களை அவர்களது குடியிருப்புக்குள் வைத்துக் கொலை செய்து அழித்தெரிக்கும் அவலத்துக்கும்,அந்த வலியை நாம் உணர்வதற்குமான நேரடிச் சாட்சியாக யாழ் முஸ்லீம் இனத்தின் அவலம் வரலாறு பூராகத் தொடரவேண்டுமா?

தமிழ்த் தேசியத்தைப் பேசுபவர்கள்,அதை வைத்து ஆட்சி,அதிகாரத்தைப் பெறும் கட்சிகள்-குழுக்கள்,இவர்களின் பின்னே யாழ்ப்பாணத்தில் பெரு வர்த்தகம் புரிந்து கோடிகோடியாயச் சம்பாதிக்கும் வர்த்தகர்களுட்பட இந்த அவலத்துக்குப் பதிலளிக்கவேண்டும்-நஷ்ட ஈடு கட்டி அவர்களது வாழ்விடங்கள் புனர் நிர்மாணிக்கப்பட்டு அவர்களை வாழ வைக்க வேண்டும்.வடபுலத்தில் மீளக் குடியேறும் முஸ்லீம் மக்களுக்குக் குறிப்பாக இளையவருக்கு அது அவர்களது தாயகமெனும் உணர்வு வரும்வரை வாழ்சூழல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இதற்காக இலங்கை அரசானது தமிழ்த் தேசிய வாதிகள்,கட்சிகள்,தலைவர்கள்,ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் புலித் தலைமைகளுட்பட வடமாகாண வர்த்தகர்கள் மற்றும் தமிழினத்திடமிருந்து நஷ்ட ஈடு பல கோடி அறவிட்டு இந்த மக்களுக்கு வழங்கியாக வேண்டும்.

கூடவே,இவ்வளவு அழிவுக்கும் மூல காரணமான சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையும் அதுசார்ந்த அரசுகளுமென்பதால் இலங்கையை ஆளும் கட்சிகள் தமக்குள் இணைவுகொண்டு ஒரு சட்டம் இயற்றியாக வேண்டும்.அது,சிங்கள,தமிழ்த் தேசியத்தின் கொடியவொடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இனத்துக்கு அடுத்துவரும் நூற்றாண்டுவரை எந்த இறைவரியும் அறவிடக்கூடாது.

குறிப்பாக அவர்கள் வரிவிலக்களிக்கப்பட்ட இனமாகவே சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும்.

இதுவே,அவர்களது அழிவுகளுக்கான நீதீயும், அரச நியாயமுமாகும்.

இத்தகைய நிலையை ஏலவே நாசியத்தால் பாதிகப்பட்ட இனங்கள் உலகில் பெற்று வாழ்கின்றனர்.

இலங்கை அரசை இது நோக்கிச் செயற்பட வைக்கும் பாரிய தார்மீகப் போராட்டத்தை இஸ்லாமிய மக்கள் தொடர்வதற்குத் தமிழினம் உறுதுணையாக நின்று, தனது வரலாற்றுத் தப்புக்கான தண்டனையை அவர்களுக்கு நஷ்ட ஈடுகட்டி, உலகில் நாமும் நியாயமானவர்கள்தாமென நிரூபித்தாகவேண்டும்.

இதற்கான அரசியல் ஊக்கத்தை கருத்தியற்றளத்தில் அனைவரும் ஏற்று முன்மொழிவதே முஸ்லீம்களுக்கான உடனடித் தீர்வாகும்!!!

இதைவிட்ட அனைத்தும் ஏமாற்று.அது முற்போக்குச் சக்திகளாற்கூட முன்வைக்கும் நிலையிலும்கூட!

ப.வி.ஸ்ரீரங்கன்
27.01.2013

Keine Kommentare: