Freitag, 29. März 2013

ஐரோப்பா உரம் போட்டு வளர்ந்த கதை


 நான் மனிதனென
உறவு வெளிக்களுக்குள் இதயத்தை
எல்லா "விலைக்கும் "வைத்தேன்
வேண்டுவாரில்லை

தெரு ஓராமாய்
எனது இரகசியங்களையும்
வலியையும் குவித்து வைத்திருக்கும்
உள்ளாடைக்குள் மெல்லப் புதைத்து வைத்தேன்
ஒவ்வொன்றாக அள்ளிச் சென்றனர்



 எடுத்துப் போட்ட இரகசியமோ
எனது இதயத்தைத் துடிக்கத் துடிக்க  அறுத்துப்போட்டு
அப்பனுக்குக் கஞ்சிக்கு அடுப்பு எரிக்க
நெருப் பூட்டும் போது
என் உணர்வுகளுக்குக் கச்சை கட்டி
விற்கப்படும் சந்தில் என்னைப் புணர்ந்த வியாபாரிகள்
எனக்கான சவப் பெட்டியை வண்ணங்கொண்ட
வகைகளில் செய்துகொண்டனர்




என் வலிக்கும்
வடுவுக்கும் ஒரு தலிபான் துப்பாக்கிக் குண்டின்
விலை மூன்று மில்லியன் டொலரென
நிர்ணயித்த  ஐரோப்பிய மனித நேயவாதிகள்
அள்ளிக் கொட்டும் வானேவிக் குண்டுகளுக்கு
அடுக்கடுக்காய் டசின் கணக்கில்
சிரசு தெறிக்கும் என்னைப் போன்றோருக்கு
அவ்கானில் மனித நேயம்-சனநாயகம் விலையென நிர்ணயித்த
அரசியலை எவரெனக்குச் சொல்வார்?
எல்லாவற்றையும்
அள்ளி வைத்து
ஐரோப்பா உரம் போட்டு வளர்ந்த கதை
 எப்போதும் போல சனநாயகமெனவும்
அவர்களது குண்டுகளுக்குச்  சாவீடாகும் தேசத்தின்
முற்றத்துள்  வளர்க்கப்படும் முள் முருக்கில்
கட்டப்படும் அரசியல் மனித முன்னேற்றமுமென
ஐ.நா. அடுக்கி வைக்கும்-பிறகென்ன?

அவர்களுக்காய் சாவோம்
அவர்களுக்காய்க் குருதி சிந்துவோம்
அல்லாவின் துணையோடும் 
அரவணைத்த மொழிகளோடும் மதங்களோடும்!

 29.03.2013

Keine Kommentare:

Blog-Archiv